Thursday, March 10, 2011

இலங்கை அணி 139 ஓட்டங்களால் இலகு வெற்றி




இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 139 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது. 


கண்டி பல்லேகல மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் மற்றும் தரங்க அபாரமாக 
துடுப்பெடுத்தாடினர்.


இருவரும் முதல் விக்கட்டுக்காக 282 ஓட்டங்களை பெற்றமை உலகக் கிண்ண போட்டிகளில் சாதனையாக பதியப்பட்டுள்ளது. இவ்விரு வீரர்களும் தனது முதல் உலகக் கிண்ண சதத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


தரங்க 133 ஓட்டங்களையும், டில்சான் 144 பெற்று ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் 45ஆவது ஓவர் வரை துடுப்பெடுத்தாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனினும் அடுத்த 5 ஓவர்களில் இலங்கை அணியின் 4 விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டன. முறையே பெரேரா 3 ஓட்டங்களுடனும், ஜெயவர்தன 9 ஓட்டங்களுடனும், மெத்தியூஸ் எவ்வித ஓட்டம் பெறாதும், சில்வா 8 ஓட்டங்களுடனும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். 


களத்தில் சங்கக்கார 11 ஓட்டங்களுடனும், சமரவீர 8 ஓட்டங்களுடன் இருக்க 50 ஓவர் நிறைவில் இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.


பந்து வீச்சில் சிம்பாப்வே அணியின் சார்பாக எம்பொபு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


328 எனும் கடின வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும் பின்னர் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. 


19.5 ஓவர்களில் 116 ஓட்டங்களை பெற்றிருந்த போது சிம்பாப்வே அணி தனது முதல் விக்கட்டை இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டெய்லர் அதிரடியாக 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மறுபுரத்தில் இருந்த சகபாவா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 


இதனை பின் தொடர்ந்த வீரர்கள் 20 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிம்பாப்வே அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


இலங்கை அணியின் பந்து வீச்சில் டில்சான் 4 விக்கெட்டுகளையும், முரளிதரன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியின் மூலம் முரளிதரன் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 150 கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை அணி வெற்றியின் மூலம் காலிறுதியை உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பிரகாசித்த டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.



flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates