செஞ்சூரியனில் நேற்று நடந்த பகல் இரவு ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் தென்னாப்பிரிக்காவை துடுப்பெடுத்தாட அழைத்தது தோனி செய்த மிகப் பெரிய தவறு.
தொடக்க வீரர் ஸ்மித் 7 ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தாலும் அம்லா அபாரமாக விளையாடி தனது 7வது சதத்தை நிறைவு செய்தார். வான் விக் 56 ஓட்டங்களும், டுமினி 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 46 ஓவர்களில் 268 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 40.2 ஓவரில் 234 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்கள் பார்தீவ் பட்டீல் 38 ஓட்டங்களுடனும், ரோகித் சர்மா 5 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து வந்த வீரட் ஹோலி 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தத்தை தொடர்ந்து 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியின் தலைவர் களம் இறங்கியபோது பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர் பார்த்த நிலையில் 5 ஓட்டங்களுடன் மார்க்கல் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த யுவராஜ் சிங் 8 ஓட்டங்களுடனும் , சுரேஷ் ரெய்னா 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய யூசுப் பத்தான் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். பத்தானின் ஆட்டத்தை பார்த்தபோது இந்தியா அணி எளிதாக வெற்றிப் பெற்று விடும் என்று கருதப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக மார்க்கல் பந்தில் பத்தான் ஆட்டம் இழந்தார். இவர் 70 பந்தில் 105 ஓட்டங்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி, 8 சிக்சர் அடங்கும். பின்னர் ஹர்பஜன் சிங் 13, சாவ்லா 8 , ஜாகீர் கான் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 3-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா கைபற்றியது. ஆட்ட நாயகனாக அம்லாவும், தொடர் நாயகனாக மார்க்கல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


No comments:
Post a Comment