ஈடன் கார்டன் மைதானத்தின் புதுப்பித்தல் பணி நிறைவு பெறாததால், இங்கு உலக கிண்ண தொடரின் முதல் போட்டியை நடாத்த, ஐ.சி.சி., அனுமதி மறுத்துள்ளது. இதனால் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி பெங்களுருவுக்கு மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்காக புதுப்பிக்கப்பட்டு வரும் மைதானங்கள், கடந்த ஜனவரி 25ஆம் திகதிக்குள் தயாராக வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கெடு விதித்தது. வான்கடே (மும்பை), ஈடன் கார்டன் (கொல்கத்தா) போன்ற மைதானங்களை கடந்த சில நாட்களாக ஐ.சி.சி., ஆய்வு செய்தது. இதில் வான்கடே மைதானத்தில் ஏறக்குறைய அனைத்து வேலைகளும் முடிவடைந்தது.

மீதமுள்ள ஒரு சில சிறிய வேலைகளை அடுத்த 14 நாட்களுக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈடன் கார்டன் மைதானம் தயாராகவில்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி தலைமை அதிகாரி ஹாரூன் லோர்கட் கூறுகையில், 'உலக கிண்ண தொடருக்கு தயாராக, அனைத்து மைதானங்களுக்கும் போதிய அவகாசம் கொடுத்திருந்தோம். தவிர, அவர்கள் கேட்டுக்கொண்டபடி கூடுதல் காலமும் ஒதுக்கினோம். இதில் ஈடன் கார்டன் மைதானம் மட்டும், குறிப்பிட்ட இறுதி கெடுவுக்குள் (ஜன., 25) திகதிக்குள் தயாராகவில்லை. இதனால் இங்கு நடைபெறவிருந்த முதல் போட்டியை மாற்ற வேண்டும், என்ற கடின முடிவை எடுத்தோம். இது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும். இருந்தாலும் வேறு வழியில்லை, என்றார்.
ஈடன் கார்டன் மைதானத்தில், 4 உலக கிண்ண போட்டிகள் நடைபெறவிருந்தது. ஐ.சி.சி., யின் முடிவை அடுத்து, எதிர்வரும் பிப்., 27 இல் இங்கு நடைபெற இருந்த, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி பெங்களுரு அல்லது டில்லி மாற்றப்படும் எனத் தெரியவருகின்றது.


No comments:
Post a Comment