இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல தகுதியான அணி இந்திய கிரிக்கெட் அணி என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரேன் லாரா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த போதே சுனில் கவாஸ்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேபோன்று உலக கிண்ணத்துக்கான அணி தேர்வு குறித்து கருத்து வெளியிட்ட போதே லாரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.கவாஸ்கர் மேலும் தெரிவிக்கையில், 'இப்போதுள்ள இந்திய அணி அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என்போரை உள்ளடங்கிய சம பலம் நிறைந்த சிறந்த அணியாக உள்ளது. அதனால் உலகக் கிண்ணத் தொடரை நடத்திய நாடுகள் கிண்ணத்தை வென்றதில்லை என்பதை முறியடித்து இம்முறை இந்திய அணி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்" என்றார்.
'இந்திய அணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. இப்போது இந்திய அணியின் ஓரே பலவீனம் களத்தடுப்புதான். அதேவேளை பந்துவீச்சாளர்களிடமும் சில குறைகள் உள்ளன. இக்குறைபாடுகளை அணித் தலைவர் சரி செய்ய முயற்சிக்க வேண்டும்" என்று மேலும் தெரிவித்தார்.
மேலும் லாரா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'உலக கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சிறப்பான ஒரு அணியாக உள்ளது. வலுவான வீரர்களை அணிக்கு தேர்வு செய்து உள்ளனர். எனவே இந்திய அணி ஏனைய அணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என தெரிவித்தார்.

No comments:
Post a Comment